headlines

img

காஷ்மீரம் வெல்லட்டும் ...  

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குப்கார் பிரகடனத்தின் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதியதோர் அரசியல் கூட்டணி உதயமாகியிருப்பது, இந்திய நாட்டில் ஜனநாயக எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு -காஷ்மீரில் செயல்படும் ஏழு அரசியல் கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஒரு காலத்தில் அரசியல்ரீதியாக எதிரெதிர் துருவத்தில் இருந்த கட்சிகள் தான் இவை. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் எதேச்சதிகார நகர்வுகளுக்கு எதிராக, ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில் இவை கைகோர்த்திருப்பது மிக முக்கியஅரசியல் நிகழ்வுப் போக்கு ஆகும்.

இந்த கூட்டணியின் தலைவராக காஷ்மீரத்தின் முதுபெரும் தலைவர் பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டிருப்பதும் துணைத் தலைவராக மற்றொரு மூத்த அரசியல் தலைவரான மெகபூபா முப்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதும் ஏழு கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் மகத்தான பணியில் கூட்டணியின் அமைப்பாளராக - கன்வீனராக இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் காஷ்மீர் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிற முகமது யூசுப் தாரிகாமி பொறுப்பேற்றிருப்பதும் காஷ்மீரத்தின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் நிகழ்வு ஆகும். 

ஜனநாயகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிதைத்து, ஜனநாயகத்தின் உயிரையே பறித்து, உயிரற்ற வெறும் கூடாக மாற்றுவதே பாசிச சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வெறிகொண்ட மூலதனக்குவிப்பிற்கு உயிர் உருவப்பட்ட ஜனநாயகமே தேவைப்படுகிறது. அதன் முதற்படியாகவும் மிக கொடூரமான தாக்குதலாகவும் தொடுக்கப்பட்டதுதான் கடந்தாண்டு ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை பறித்து, அந்த மாநிலத்தையே சிதைத்துயூனியன் பிரதேசங்களாக மாற்றிய பயங்கரம்.

இந்த அடாவடிச் செயல் மூலமாக ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களையும் அவர்களது உணர்வுகளையும் முற்றாக புறக்கணித்து அவர்களது வாழ்வியலையும் பண்பாடுகளையும் அழித்தொழிக்கும் அராஜகத்தில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கு எதிராக அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு, பாசிச எதிர்ப்பு - ஜனநாயக பாதுகாப்பு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலம் இட்ட கட்டளை என்பதை, கடந்த ஓராண்டுகால கொடிய அனுபவங்கள் மூலம் ஜம்மு-காஷ்மீரின் அரசியல் இயக்கங்கள் உணர்ந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் குப்கார் பிரகடனமும், அதன் அடிப்படையில் அமைந்துள்ள அரசியல் கூட்டணியும். 

இது தேர்தலுக்கானதல்ல; மாறாக தேர்தல் நடைமுறை உட்பட ஜம்மு- காஷ்மீரின் ஜனநாயகவாழ்வை மீட்டெடுப்பதற்கான ஒற்றுமைக் கூட்டணி. இதை அக்கூட்டணியின் தலைவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மொத்த தேசமும் ஜம்மு- காஷ்மீர் மக்களுடன் ஒன்றிணைவோம். காஷ்மீரின் ஜனநாயகம் காப்பது, தேசத்தின் ஜனநாயகத்தை காப்பதற்கான முதல்படியாகும்.